அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனைத்து சமூகத்தினரும் இடம்பெறும் வகையில் விழாக் குழு அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அவனியாபுரம் மற்றும் சுற்றுபுற கிராமங்களை ஒருங்கிணைத்து விழாக் குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். நிகழ் ஆண்டில் விழாக் குழு அமைப்பதில், பொதுமக்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக தனித் தனிக் குழுக்களாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.
அவனியாபுரம் அனைத்து கிராம பொதுமக்கள் சார்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. அதில், அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தினர் இடம்பெறும் கிராமப் பொதுமக்கள் சார்பில் தான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. நிகழ் ஆண்டும் அதன்படி, கிராமப் பொதுமக்கள் தீர்மானித்துள்ள விழாக் குழு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல, அவனியாபுரம் வீரகுல அமரன் இயக்கம் அமைப்பின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குப் பரிசுகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
விழாக் குழுவினருக்கு விரும்பிய நபர்களுக்கு, முக்கிய பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆகவே, அனைத்து சமூகத்தினர் இடம்பெறும் வகையில் விழாக் குழு அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








