கொட்டாம்பட்டி அருகே கம்பூர் கிராமத்தில் மத்திய புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மத்திய புவியியல் துறையினர் மேலூர் பகுதிகளில் உள்ள பாறைகள், மலைகளை கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக ஆய்வுசெய்து வருகின்றனர். எந்த அறிவிப்பும் இன்றி புவியியல் துறையினர் ஆய்வு செய்வதால் அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இப்பகுதிகளில் உள்ள பாறைகளில் கனிமப் பொருள்கள் நிறைந்துள்ளதாக பொதுமக்களிடையே நம்பிக்கை உள்ளது.
கீழவளவு அருகே புறாக்கூடுமலை இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தமலையை, தமிழக கனிமவளத் துறையினர் உதவியுடன் ஒரு கிரானைட் நிறுவனம் இரவு, பகலாக அறுத்து ராட்சத அளவில் கிரானைட் கற்களாகவே வெளிநாடுகளுக்கு முறைகேடாக ஏற்றுமதி செய்துவிட்டதாகவும், கனிமம் நிறைந்த இந்த மலை பாறையை பல்வேறு குவாரிகளில் பதுக்கியும் வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகளால் யாராவது மலைப்பாறையை உடைத்து ஆய்வுசெய்ய முயன்றால் பொதுமக்கள் அச்ச உணர்வுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கம்பூர் கிராமத்தில் பாறைகளை மத்திய புவியியல் துறையைச் சேர்ந்த பாபு என்பவர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். இதனைப் பார்த்த கிராம இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டுவந்து ஆய்வு செய்யவிடாமல் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து, கொட்டாம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும் இதுகுறித்து அறிந்த மேலூர் வட்டாட்சியர் சரவணன் அங்குவந்து கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொதுவாக ஆய்வுசெய்யும் பணி நடைபெறும் இடங்களை வருவாய்த்துறையினர் கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். அதையடுத்து மத்திய புவியியல் துறையினர் பாறையின் சிறு துண்டை வெட்டி எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







