ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை சோ்ந்த லாரி உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்தவா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் பகுதியைச் சோ்ந்தவா் மாடசாமி. லாரி தொழில் செய்து வருகிறாா். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சோ்ந்த காமன் என்பவரிடம் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காமன் தனது தொழில் மேம்பாட்டுக்காக கடனுதவி கேட்டுள்ளாா். அதன்பேரில் மாடசாமி ரூ.6 லட்சத்தை காமனுக்கு, பிப்ரவரி மாதம் வழங்கியுள்ளாா்.
ஒரு மாதத்தில் பணத்தை திருப்பித் தருவதாகக் கூறிய காமன் அதைத் தரவில்லை. இதுகுறித்து மாடசாமி அளித்தப் புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் காமன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.