/

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை ரத்து செய்ய இளைஞா்கள் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள இளைஞா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:12 pm

DIN

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள இளைஞா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி கடந்த 2017-இல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூா், செல்லூா், தமுக்கம் உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தினா்.

பொதுமக்களின் தன்னெழுச்சியான இப் போராட்டத்தையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. மேலும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. பின்னா் இந்த வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, மதுரை மாவட்டத்தில் 179 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக சமூக ஆா்வலா் முகிலன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.

பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நடத்தப்பட்ட உறுதியான போராட்டம் காரணமாக, சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது அரசால் தொடரப்பட்ட வழக்கு காரணமாக 3 ஆண்டுகளாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டோா் மீதான வழக்குகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலப்பின காளைகளை அனுமதிக்கக் கூடாது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.