மதுரை: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாம் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடைபெற்றது. துணைமேயர் நாகராஜன் மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குறைதீர் முகாமில் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் தெருவிளக்கு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்து மனுக்களை அளித்தனர். அப்போது திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி பிரேமலதா என்பவர் தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அருகிலிருந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தினர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த துணை மேயர் நாகராஜன் தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில் அருகே பூக்கடை வைத்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம் தனது கடையை காலி செய்து விட்டதாகவும் தெரிவித்தார். இதனால் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாக தெரிவித்தார்.
மேலும் தனது இரண்டு பெண் குழந்தைகள் இதை வைத்து தான் படிக்கின்றனர் என தெரிவித்து மீண்டும் எனக்கு கடை வைக்க அனுமதி வழங்கி தருமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து துணை மேயர் நாகராஜன் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் வெயிலுகந்த அம்மன் கோவிலுக்கும், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய ஸ்வாமி கோயிலுக்கும் இடையே வழக்கு நிலுவையில் உள்ளது .
அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வரும் வரை அந்தப் பெண் மீண்டும் அதே பகுதியில் கடை வைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மக்கள் குறைதீர் முகாமில் திடீரென பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் தீக்குளிக்க முயன்றது குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: கோடையில் தொடர்மழை: பூத்துக்குலுங்கும் மலர்கள்