மதுரை: எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் தொடங்கிவிடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திந்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் துவங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு தமிழக சுகாதார துறையிடம் விவரங்களை சேகரித்துள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் தமிழக அளவில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 96,807 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3,185 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு இதுவரை 87 கோடியே 34 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டண படுக்கை மையம் அமைக்கபட உள்ளது. கடந்த ஆட்சியின்போது நாள்தோறும் 61 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது நாள்தோறும் லட்சக்கணக்காணொருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது
தமிழகத்தில் இதுவரை முதல் தவணை 95.95 சதவீதமும், 2ம் தவணை 88.52 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 86.20 சதவீதமும், 2-ம் தவணை 75.02 ஆக உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பெரு நகரங்களில் மதுரை பின் தங்கிய நிலையில் உள்ளது. மதுரையில் தடுப்பூசி சதவீத குறைப்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் 30,35,680, 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் 92,14,707, பூஸ்டர் தடுப்பூசி 3 கோடியே 40 லட்சம் பேர் செலுத்த வேண்டியுள்ளது. ஆகஸ்ட் 7-ம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது .
இதையும் படிக்க: செய்தியாளர் சந்திப்பின் போது தூங்கி வழிந்த அமைச்சர்: வெளியான விடியோ
மதுரை எய்ம்ஸ் கட்டிட வடிமைபிற்கான டெண்டர் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வரைபடம் தயாரித்து எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது: எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் தொடங்கிவிடும் என தெரிவித்தார்.