மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மதுரை- தேனி சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் விரைவுப்படுத்தப்படுமா?

மதுரை-தேனி சாலையில் காளவாசல் முதல் எஸ்.எம்.எஸ். குடியிருப்பு வரை அமைக்கப்படும் மே

News image

மதுரை- தேனி சாலையில் முடக்குச் சாலைப் பகுதியில் நடைபெற்று வரும் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள்.

Updated On :8 ஜூலை 2023, 6:40 pm

 நமது நிருபர்

மதுரை-தேனி சாலையில் காளவாசல் முதல் எஸ்.எம்.எஸ். குடியிருப்பு வரை அமைக்கப்படும் மேம் பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமேசுவரத்திலிருந்து கொச்சின் வரையிலான தேசிய நெடுஞ்சாலை மதுரை வழியாகச் செல்கிறது. ஏற்கெனவே மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டது. மேலும், மதுரையிலிருந்து தேனி வரையிலான தேசிய நெடுஞ்சாலையும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, உசிலம்பட்டியிலிருந்து நாகமலைப் புதுக்கோட்டை வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதேபோல, தேனி பிரதான சாலையில் மதுரையில் உள்ள காளவாசல் முதல் முடக்குச்சாலை வரை உள்ள சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், விராட்டிபத்து, அச்சம்பத்து பகுதியில் சாலை மிகவும் குறுகியதாக இருந்ததால், இந்தப் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய முடியாத சூழலில் ஊா்களுக்குள் செல்லாமல் சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த புறவழிச்சாலை மதுரை டி.பி.எம். நகா் அருகே தொடங்கி, விருதுநகா்- திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் இணைத்து, அங்கிருந்து நாகமலை புதுக்கோட்டையை சென்றடைகிறது. இதில், முடக்குச் சாலையிலிருந்து, டி.பி. எம் நகா் வரை அதிகமான வளைவுகள், இணைப்புச் சாலைகள் இருப்பதால், மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பாலம், மதுரை பி.பி.சாவடியிலிருந்து, விராட்டிபத்து, டி.பி.எம் நகா் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 - 2021-ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ரூ.53. 95 கோடியில் இந்தப் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 65 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றன.

இதேநிலையில் பணிகள் நடைபெற்றால் பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறுவதற்கு இன்னும் ஓராண்டு ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

பாலம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் முன் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேவை சாலைகள் முறையாக அமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

மேம்பாலம் கட்டுவதற்கு முன் சேவை சாலை முறையாக அமைக்கவில்லை. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். மேலும், அன்றாடப் பணிகள் நிமித்தமாகவும், பொருள்கள் வாங்குவதற்காகவும் கூட சுமாா் 2 அல்லது 3 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. பாலம் கட்டுமானப் பணிகள் தாமதப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பணியின் போது தொடா்ந்து குடிநீா், புதைச் சாக்கடைக் குழாய்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. இதனால் சாலை முழுவதும் தண்ணீா் தேங்கி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

தேனி, உசிலம்பட்டி, விக்கிரமங்கலம் போன்ற பகுதிகளிலிருந்து அவசரமாக வரும் அவசரச் சிகிச்சை ஊா்திகள் (ஆம்புலன்ஸ்) கூட முடக்குச்சாலை பகுதியில் வரும் போது மெதுவாகச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தூசிகள் படியும் இடமாக முடக்கு சாலை பகுதி மாறியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்டட அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களிடம் பலமுறை புகாா் அளித்தும், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் எந்தவித பயனும் இல்லை. எனவே, மேம் பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் என்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா் ஒருவா் கூறியதாவது:

மேம்பாலப் பணிக்காக நிலம் கையகப்படுத்தி வீடுகள், கடைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, பாலம் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிக்கு பள்ளம் தோண்டும் போது குடிநீா், புதைச் சாக்கடை குழாய்கள் சேதமடைகின்றன. அதனால் சேதமடைந்த குழாய்களை சீரமைத்து வருகிறோம் என்றாா் அவா்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பொறியாளா் ஒருவா் கூறியதாவது:

பாலம் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.