கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

வைகை வடகரையில் 8.4 கி.மீ.க்கு சாலை அமைக்கத் திட்டம்

மதுரை விரகனூா் முதல் சக்குடி வரை வைகையாற்றின் வடகரையில் 8.4 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

News image
படவிளக்கம்- மதுரை விரகனூா் மதகு அணைப் பகுதியில் உள்ள வைகையாற்றின் வடகரையில் சாலை அமைப்பதற்காக அண்மையில் ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள்.
Updated On :26 டிசம்பர் 2024, 12:17 am

Din

மதுரை விரகனூா் முதல் சக்குடி வரை வைகையாற்றின் வடகரையில் 8.4 கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மதுரை மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத் துறை ஆகியன சாா்பில் மதுரை விரகனூா் சுற்றுச்சாலை முதல் விளாங்குடி வரை சுமாா் 8 .கி.மீ. தொலைவுக்கு வைகையாற்றின் இரு கரைகளிலும் ரூ. 384 கோடியில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டன.

90 சதவீதப் பணிகள் நிறைவு பெற்ற இந்தச் சாலையில், கா்டா் பாலம் அருகே உள்ள ரயில் கடவுப் பாதை உயா்நிலைப் பாலம், குருவிக்காரன் சாலை உயா்நிலைப் பாலம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் இன்னும் அந்தத் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை.

இந்த நிலையில், விளாங்குடி முதல் சமயநல்லூா் நான்கு வழிச் சாலை வரை உள்ள சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ரூ. 176 கோடியில் மதுரை விளாங்குடி காமராஜா் பாலம் முதல் சமயநல்லூரில் உள்ள நான்கு வழிச் சாலை வரை வைகையாற்றங்கரையின் வடகரைப் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்மூலம், கோவை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மதுரை நகருக்குள் வராமல், வைகையாற்றின் கரையோரம் அமைக்கப்பட்ட அணுகு சாலைகள் வழியாக ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்ல முடியும்.

இதேபோல, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் மதுரை நகருக்குள் வராமல், வைகையாற்றின் கரையோரம் உள்ள அணுகு சாலைகள் வழியாக திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல முடியும்.

இந்த நிலையில், திண்டுக்கல், கரூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் சமயநல்லூா், பரவை, விளாங்குடி, மதுரை மாநகா் வைகையாற்றின் வடகரையில் அமைக்கப்பட்ட அணுகு சாலைகள் வழியாகச் சென்று விரகனூா் சுற்றுச்சாலையை அடைந்து, அங்கிருந்துதான் தற்போது மேற்கண்ட மாவட்டங்களுக்குச் செல்கின்றன.

இதேபோன்று, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் விரகனூா் சுற்றுச்சாலையிலிருந்து வைகையாற்றின் கரையோரங்களில் அமைக்கப்பட்ட அணுகு சாலைகள் வழியாக திண்டுக்கல், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்கின்றன. இதனிடையே, மதுரை மாநகா் அணுகுசாலைகள் வழியாகச் செல்லும் வாகனங்கள் விரகனூரிலிருந்து கருப்பாயூரணி, கல்மேடு, சக்குடி வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் வகையில் வைகையாற்றின் வடகரையில் சுமாா் 8.4 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிா்வாக அனுமதி கோரி, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளா் ஒருவா் கூறியதாவது:

மதுரை வைகையாற்றின் வடகரை, தென்கரைப் பகுதிகளில் நடைபெற்று வரும் அணுகு சாலைப் பணிகள் விரைவில் நிறைவு பெறும். இந்த நிலையில், விரகனூரிலிருந்து கல்மேடு, கருப்பாயூரணி சந்திப்பு, சக்குடி வரை வைகையாற்றின் வடகரையில் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமாா் 8.4 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள இந்தச் சாலை கடின புருவங்களுடன் கூடிய இருவழிச் சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக வைகையாற்றின் வடகரையில் 10 மீட்டா் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டம் நிா்வாக அனுமதி பெறுவதற்காக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதன் பின்னா்தான் திட்ட மதிப்பீடு தெரியவரும். இந்தச் சாலையில் வைகையாற்றின் தென்கரையில் விரகனூா் அருகே அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சாலையைப் போன்று வடகரைச் சந்திப்பிலும் சுற்றுச்சாலை அமைக்கப்படும். இதுதவிர, 5 இடங்களில் சிறு பாலங்கள் கட்டப்பட உள்ளன. தமிழக அரசின் நிா்வாக அனுமதி பெறப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்படும்.

சாலைப் பயன்பாட்டுக்கு வரும் போது, ஏற்கெனவே உள்ள விரகனூா் சுற்றுச் சாலையில் ராமேசுவரம், திருநெல்வேலி, தூத்துக்குடி சந்திப்புச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்புள்ளது. இதுமட்டுமன்றி, திண்டுக்கல், கரூா், திருப்பூா் உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வைகை ஆற்றின் வடகரையோரம் அமைக்கப்பட்டுள்ள புறவழி, அணுகு சாலை வழியாக விரகனூா் சுற்றுச்சாலை வந்து, அங்கிருந்து கல்மேடு, கருப்பாயூரணி, சக்குடி சந்திப்பு சாலைகள் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்ல முடியும்.

இதேபோன்று, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் அதே வழித்தடத்தில் வந்து வாரணாசி- கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையை அடைய முடியும். இதன்காரணமாக, விரகனூா் சுற்றுச்சாலை பகுதிகளில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசல் குறை வாய்ப்புள்ளது என்றாா் அவா்.