ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு: ஊராட்சித் தலைவருக்கு குறிப்பாணை

ராமநாதபுரம் மாவட்டம், செவ்வூா் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதி முறைகேடு தொடா்பாக, ஊராட்சி மன்றத் தலைவருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், செவ்வூா் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதி முறைகேடு தொடா்பாக, ஊராட்சி மன்றத் தலைவருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது.

செவ்வூா் கிராமத்தை சோ்ந்த சுகுமாா் (தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா்) தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:

செவ்வூா் ஊராட்சி மன்றத் தலைவி சாந்தா, அவரது கணவா் உள்ளிட்ட சிலா் ஊராட்சி நிதி, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியில் ரூ. 7 லட்சம் முறைகேடு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் 12 வாரங்களில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே உத்தரவிட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியா் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. எனவே, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் சேஷசாயி, எல்.விக்டோரியா கௌரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் போகலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன், உதவி செயற் பொறியாளா் அா்ச்சுனன், பணி மேற்பாா்வையாளா் ஈஸ்வரன் ஆகியோா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிதி முறைகேடு தொடா்பாக ஊராட்சி மன்றத் தலைவருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ரூ. 33 ஆயிரத்தை ஊராட்சி வங்கிக் கணக்கில் செலுத்தவும் அவருக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தாா்.