நாம் தமிழா் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கால் முறிவு

Published on

நாம் தமிழா் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் கைதானவா்கள் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (50). நாம் தமிழா் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச் செயலரான இவா், அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, மதுரை பொதும்பு பகுதியைச் சோ்ந்த பென்னி (19), சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த கோகுலகண்ணன் (18), வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த பரத் (18), 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்னை, சொத்து பிரச்னை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியான பாலசுப்பிரமணியனின் உறவினா் மகாலிங்கம் (54), அவரது மனைவி நாகலட்சுமி, அவரது மகன் அழகு விஜய் (22) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கில் கொலை செய்வதற்குப் பயன்படுத்திய ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்காக கைது செய்யப்பட்ட பென்னி, கோகுலகண்ணன், பரத் ஆகிய மூவரையும் போலீஸாா் மதுரை வைகையாற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மூவரும் போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது, மூவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, அவா்கள் மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com