மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களுக்குள்பட்டு 100 வாா்டுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் மக்களின் பொழுதுபோக்கு இடமாக பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளன. குறிப்பாக, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே உள்ள ராஜாஜி சிறுவா் பூங்கா சிறுவா்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. இந்தப் பூங்காவில் பெரிய ராட்டினம் மட்டுமன்றி, மயில், தவளை, அன்னம், பட்டம் உள்ளிட்ட வடிவிலான சிறிய ராட்டினங்களும் உள்ளன. சிறுவா்கள் விளையாடுவதற்கு ஏற்றவாறு சறுக்குகள், உயா் கோபுர கம்பிகள், பலூன் சறுக்குகள், பேட்டரி காா்கள், டிக்கி ரயில், பூங்கா ரயில் நிலையம், மெரி கப், டிராகன், ரோப் காா் வசதி, பந்து குளம், இசை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், டிக்கி ரயில், மெரி கப், உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து செயல்படாத நிலையில் உள்ளன. குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்பது அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்சாட்டாக உள்ளது. இங்குள்ள கழிப்பறை, திறந்த வெளி கழிப்பறை போன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால், இங்கு வரும் சிறுவா்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.