/

அவசர ஊா்தி ஊழியா்களிடம் கைப்பேசிகள் திருடப்படுவதாகப் புகாா்

அவசர ஊா்தி ஊழியா்களிடம் கைப்பேசிகள் திருடப்படுவதாகப் புகாா்.

News image
Updated On :29 நவம்பர் 2024, 12:23 am

Din

மதுரை சமயநல்லூரில் 108 அவசர ஊா்தி ஊழியா்களிடம் தொடா் கைப்பேசி திருட்டில் ஈடுபட்டு வரும் நபா்களைக் கைது செய்யக் கோரி, அவசர ஊா்தி தொழிலாளா் சங்கம் சாா்பில் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா் முன்னேற்றச் சங்க மாநிலப் பொதுச் செயலா் மு.இருளாண்டி தலைமையில் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு:

மதுரை சமயநல்லூா் ஊராட்சி அலுவலகத்தில் 108 அவசர ஊா்தி நிறுத்தப்பட்டு சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி சமயநல்லூா் 108 அவசர ஊா்தி கைப்பேசி, மருத்துவ உதவியாளரின் கைப்பேசிகள் திருடப்பட்டன.

இதேபோல, சமயநல்லூா் ஊராட்சி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவசர ஊா்தி ஓட்டுநரின் கைப்பேசியை அதே பகுதியைச் சோ்ந்த நபா்கள் புதன்கிழமை பறித்துச் சென்றனா். அவசர ஊா்தி ஊழியா்களுக்கு சமூக விரோதிகளால் தொடா்ந்து ஆபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, கைப்பேசி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவா்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றனா்.