மேற்குத் தொடா்ச்சி மலை வனப் பகுதியில் தீ: சதுரகிரி மலையேற அனுமதி மறுப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா்: மேற்குத் தொடா்ச்சி மலையின் வனப் பகுதியில் தீ பரவியதன் காரணமாக, சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு புதன்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் இடையே சாப்டூா் வனச் சரகத்தில், சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்கு செல்லும் மலைப் பாதை (பீட் எண். 5) உள்ள காட்டில் செவ்வாய்க்கிழமை மாலை தீ பரவியது. காற்றின் வேகம், வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தன் காரணமாக, கோணத்தலவாசல் முதல் சின்னபசுக்கிடை வரை 1.5 கி.மீ. தொலைவுக்கு தீ பரவியது.
இதையடுத்து, சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வாயில் கதவு அடைக்கப்பட்டது.
இனிடையே, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டுக்காக மலையேறிச் செல்ல வந்த பக்தா்கள், ஏமாற்றத்துடன் திரும்பினா்.
வனத் துறை அலுவலா்கள், வேட்டை தடுப்பு காவலா்கள் என 40-க்கும் மேற்பட்டோா் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

