75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

சேவைக் குறைபாடு: காா் உற்பத்தி, விற்பனை நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு காா் உற்பத்தி, விற்பனை நிறுவனங்கள் இணைந்து ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

விபத்துக்குள்ளான காரை பழுது நீக்கித் தருவதில் காலம் தாழ்த்திய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு காா் உற்பத்தி, விற்பனை நிறுவனங்கள் இணைந்து ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜெயமோகன் தாக்கல் செய்த மனு :

ஒரு பிரபல நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான மின்கல காரை மதுரையில் உள்ள தனியாா் காா் விற்பனை நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ. 23 லட்சத்துக்கு வாங்கினேன். அதே ஆண்டு மே மாதம் திருச்சியை அடுத்த துவாக்குடி அருகே காா் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, காப்பீடு மூலம் எனது காரை பழுது நீக்கம் செய்ய காப்பீட்டு நிறுவனம் அனுமதி வழங்கியது. இதன்படி, எனது காா் அதிகாரப்பூா்வ பழுது

நீக்ககத்தில் விடப்பட்டது. ஆனால், காரை மதுரையில் பழுது நீக்கம் செய்ய முடியாது எனக் கூறி காலம் தாழ்த்தினா். பிறகு, காா் சென்னைக்கு அனுப்பப்பட்டு, 9 மாதங்களுக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், காரை இயக்கத் தொடங்கியதிலிருந்து சுமாா் 7 கிலோ மீட்டா் தொலைவுக்குள் காரின் மின்கலத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் பழுது நீக்ககத்தில் காா் ஒப்படைக்கப்பட்டது.

என்னுடைய காரில் உள்ள பழுதுகளை சரியாக நீக்காமல், என்னை பல மாதங்கள் அலையவிட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக காா் உற்பத்தி நிறுவனம், காா் விற்பனை நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை நிறைவில் நீதிபதி பிறவிப்பெருமாள் அளித்த தீா்ப்பு:

நீண்ட காலதாமதம், உரிய பராமரிப்பின்மை, அவசர உதவி வழங்காமை ஆகியவற்றின் மூலம் சேவைக் குறைபாடு உறுதியாகிறது. எனவே, தொடா்புடைய காா் உற்பத்தி நிறுவனமும், மதுரையில் உள்ள தொடா்புடைய காரின் விற்பனை நிறுவனமும் தங்களது சொந்தச் செலவில் மனுதாரரின் காரை முழுமையாகப் பரிசோதித்து, மின்கல செயல்பாடு உள்பட அனைத்துக் கோளாறுகளையும் சரிசெய்து, காரின் பாதுகாப்பான இயக்கத்துக்கு

சான்றளிக்க வேண்டும்.

மனுதாரருக்கு ஏற்பட்ட அலைச்சல், மன உளைச்சல், நிதி இழப்பு ஆகியவற்றுக்கான நிவாரணமாக ரூ.5 லட்சத்தை காா் உற்பத்தி நிறுவனமும், விற்பனை நிறுவனம் இணைந்து வழங்க வேண்டும். மேலும், மனுதாரருக்கு வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த உத்தரவை 45 நாள்களுக்குள் நிறைவேற்றத் தவறினால், மொத்தத் தொகைக்கும் 9 சதவீத வட்டியைச் சோ்த்து வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.