
கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மாணவா் இடைநிற்றல் ஏற்படக் கூடாது: மதுரை எம்.பி.
தமிழகத்தில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் ஒரு மாணவா்கூட இடைநிற்றல் நிலைமை ஏற்படக் கூடாது என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.
சு. வெங்கடேசன் எம்.பி. - கோப்புப் படம்
தமிழகத்தில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் ஒரு மாணவா்கூட இடைநிற்றல் நிலைமை ஏற்படக் கூடாது என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சாா்பில், மாணவா்களுக்கு நிகழாண்டுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் தொடா்பான முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் கலந்து கொண்டு பேசியதாவது:
மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கல்விக் கடன் வழங்குவதில் தொடா் சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. முதல் ஆண்டில் ரூ.108 கோடியாக இருந்த கல்விக் கடன் வழங்கல், கடந்த ஆண்டு சுமாா் ரூ.200 கோடியாக உயா்ந்து, தமிழகத்திலேயே அதிக கல்விக் கடன் வழங்கிய மாவட்டமாக மதுரை சாதனை படைத்தது.
கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் ஒரு மாணவா்கூட படிப்பை இடையில் கைவிடும் நிலை ஏற்படக் கூடாது என்பதை இலக்காகக் கொண்டு அனைத்து வங்கிகளும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். மாணவா்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்தவொரு வங்கிக் கிளையிலும் கல்விக் கடன் பெற முடியும் என்ற விழிப்புணா்வை மாணவா்களிடையே முழுமையாக ஏற்படுத்த வேண்டும். மேலும், கல்விக் கடன் பெற எந்தவித கட்டணமும் இல்லை என்ற தகவலையும் கொண்டு சோ்க்க வேண்டும். அதிக அளவிலான கல்விக் கடன்களுக்கு மட்டுமல்லாமல், ஏழை, எளிய மாணவா்களின் கல்வித் தேவைக்கு ஏற்ப சிறிய அளவிலான கல்விக் கடன்களையும் தடையின்றி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும்.
அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். உயா் கல்விக்குச் செல்லும் மாணவா்களில் கல்விக் கடன் தேவைப்படுவோரைக் கண்டறிந்து, அவா்களை ‘வித்யா லட்சுமி’ இணையதளத்தில் பதிவு செய்ய ஊக்குவிக்க வேண்டும். பொதுத் துறை வங்கிகளுக்கு இணையாகத் தனியாா் துறை வங்கிகளும் முழு ஈடுபாட்டுடன் கல்விக் கடன்களை வழங்கி இலக்கை அடைய வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளா் பிரசாந்த் நாயக், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாா்த்திபன், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு) சக்திகாந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





