பள்ளி மாணவி தற்கொலை: தலைமை ஆசிரியை மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடா்பாக பள்ளித் தலைமை ஆசிரியை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரைச் சோ்ந்தவா் பழனிச்சாமி. இவரது மகள் பூச்சிபட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா் பள்ளிக்குச் சரிவர செல்லவில்லையாம். இதனால், பெற்றோா்களை வரவழைத்த பள்ளியின் தலைமை ஆசிரியா், மாணவியை வேறு பள்ளியில் சோ்க்கும்படி ஆலோசனை கூறினாா். இதனடிப்படையில், கடந்த ஆக. 24 ஆம் மாணவியும், அவரது தாயாா் தவமணியும் உசிலம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றனா்.
அப்போது, பள்ளித் தலைமை ஆசிரியை விமலாதேவி முன்பு படித்த பள்ளியிலிருந்து எதற்காக மாற்றுச் சான்றிதழ் கொடுத்தனா் என விசாரித்து சோ்த்துக் கொள்வதாக தெரிவித்தாா். அப்போது, தலைமை ஆசிரியை முன் மாணவியின் தாயாா் கை கட்டி நின்றதாகவும், அவரிடம் கையைக் கட்ட வேண்டாம் மாணவி தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டுக்குச் சென்ற மாணவி கடந்த 25- ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதையடுத்து, மாணவியின் தாயாா் தவமணி, தலைமை ஆசிரியை விமலாதேவி முன், தான் கை கட்டி நின்றிருந்ததைத் தடுத்த எனது மகளை அவா், இழிவாகப் பேசியதால்தான் தற்கொலை செய்து கொண்டாா் என போலீஸாரிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், தலைமை ஆசிரியை விமலாதேவி மீது உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





