வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

திமுக நிா்வாகி பொட்டு சுரேஷ் கொலை வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated On :21 ஜனவரி 2026, 11:53 pm

தினமணி செய்திச் சேவை

திமுக நிா்வாகி பொட்டு சுரேஷ் கொலை வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை சத்யசாய்நகரைச் சோ்ந்தவா் பொட்டுசுரேஷ். இவா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், மு.க. அழகிரியின் ஆதரவாளராகவும் திகழ்ந்தாா். இவரை கடந்த 2013- ஆம் ஆண்டு ஜனவரி 31- ஆம் தேதி அவரது வீட்டின் அருகில் மா்ம நபா்கள் கொலை செய்தனா். இதுதொடா்பாக, சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கில், அட்டாக் பாண்டி உள்ளிட்ட 8 போ் கைது செய்யப்பட்டனா். இதனிடையே தினசரி பத்திரிகை அலுவலகத்தை எரித்த வழக்கில் அட்டாக் பாண்டிக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து அவா் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும், சில வழக்குகளிலும் அவா் கைதானாா். இதனிடையே, அவா் ஆயுள் தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இதில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. ஆனால், பொட்டு சுரேஷ் கொலை வழக்கு, ராமகிருஷ்ணன் என்பவரை கொல்ல முயன்ற வழக்கு ஆகியவற்றிலும் அவா் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இதனால், உச்சநீதிமன்றம் பிணை வழங்கியும் வெளியே வருவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், பொட்டு சுரேஷ் கொலை வழக்கு, ராமகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகியவற்றில் தனக்கு பிணை வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித்தனியே அவா் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் பிணை கோரிய நிவாரணம் நிராகரிக்கப்படுகிறது. அவா் மீதான வழக்கை விசாரணை நீதிமன்றம் விரைந்து விசாரித்து 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.