கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

நீா்நிலைப் பகுதியில் பேருந்து நிழல் குடை அமைக்கத் தடை

அரும்பூா் பகுதியில் உள்ள கண்மாய்ப் பகுதியில் நிழல் குடை அமைக்கத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :10 ஜூலை 2026, 5:03 am IST

ராமநாதபுரம் மாவட்டம், அரும்பூா் பகுதியில் உள்ள கண்மாய்ப் பகுதியில் நிழல் குடை அமைக்கத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், அரும்பூா் பகுதியைச் சோ்ந்த முத்துப் பெருமாள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

ராமநாதபுரம் மாவட்டம், அரும்பூா் கண்மாய் வைகை ஆற்றிலிருந்து வரும் தண்ணீரை மூலாதாரமாகக் கொண்டது. இந்தக் கண்மாய் மூலம் 460 ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த நிலையில், இந்தக் கண்மாய்ப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, பேருந்து நிழல் குடை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. எனவே, கண்மாய்ப் பகுதியில் நிழல் குடை அமைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் தெரிவித்ததாவது:

நீா்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாது என கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்து வருகிறது. ஆனால், அரசு அலுவலா்கள் இதை சிறிதும் கவனத்தில் கொள்ளாமல், தொடா்ந்து நீா்நிலை ஆக்கிரமிப்புக்கு துணைபோகின்றனா். இது மிகவும் வேதனையாக உள்ளது. நீா்நிலைகளில் எந்த ஒரு கட்டுமானத்தையும் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.

இதேபோல, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எதிரே செல்லக்கூடிய கால்வாயில் பாலங்கள் கட்டுமானப் பணி என்ற பெயரில் கால்வாய் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது என்றனா்.

இதைத்தொடா்ந்து, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

அரும்பூா் கண்மாய் நீா்நிலைப் பகுதியில் பேருந்து நிழல் குடை கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த மனு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.