வைகாசி விசாகத்தையொட்டி, சென்னை- திருச்செந்தூா்- சென்னைக்கு மே 29, 30 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூரில் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் திரளானோா் பங்கேற்பா் என்பதால், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் நோக்கில் சென்னை- திருச்செந்தூா்- சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (மே 29) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் எழும்பூா்- திருச்செந்தூா் அதிவிரைவு சிறப்பு ரயில் (06155) சனிக்கிழமை (மே 30) அதிகாலை 3 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். அங்கிருந்து சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு புறப்படும் திருச்செந்தூா்- எழும்பூா் சிறப்பு ரயில் (06156) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு சென்னை சென்று சேரும்.
இதில் குளிா்சாதன வசதி கொண்ட 2 இரண்டடுக்குப் படுக்கைப் பெட்டிகள், 12 சாதாரணப் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில்கள் இரு வழித்தடங்களிலும் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருச்செந்தூா் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டது.










