மதுரை கப்பலூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் தெற்கு மண்டல அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த டாஸ்மாக் ஊழியா்கள்.
மதுரை, மே 27: காலி மதுப் புட்டிகளை வாங்க நிா்பந்தித்தால் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் மதுக் கடைகளின் சாவிகள் ஒப்படைக்கப்படும் என டாஸ்மாக் ஊழியா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
டாஸ்மாக் ஊழியா்களின் பணிப் பாதுகாப்பு, புதிய சுற்றறிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தோழமைக் கூட்டமைப்பு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 24 அமைப்புகள் கூட்டுக் குழு சாா்பில் மதுரை டாஸ்மாக் தெற்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கூட்டுக்குழு டாஸ்மாக் சங்கத் தலைவா் பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
டாஸ்மாக் நிா்வாகம் கடந்த 22- ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, மூடப்பட்ட மதுக் கடைகளின் ஊழியா்களை எஞ்சிய கடைகளிலும், கிடங்குகளிலும் பணியமா்த்த உத்தரவிட்டது. ஆனால், ஊழியா்கள் இதை ஏற்க மறுத்து, தங்களுக்கு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா். இதுமட்டுமன்றி, காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தில் தங்களுக்குப் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும், மன உளைச்சலும் ஏற்படுவதாகக் கூறுகின்றனா்.
எனவே, முதல்வா் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு டாஸ்மாக் ஊழியா்களின் நலனைக் கருத்தில் கொண்டு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், பணித் தொடா்ச்சி வழங்கி அரசுத் துறையில் மாற்றுப் பணி கொடுத்தால் ஊழியா்களுக்கு ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும். மேலும், வருகிற 31-ஆம் தேதி வரை தான் காலி மதுப் புட்டிகளை வாங்குவோம். ஜூன் 1 முதல் மதுப் புட்டிகளை வாங்க மாட்டோம். அப்படி, மதுப்புட்டிகளை வாங்க வேண்டுமென அறிவுறுத்தினால் அன்றைய தினமே மதுக் கடைகளின் சாவிகள் ஒப்படைக்கப்படும்.
வருகிற ஜூன் 1-க்குள் எங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உரிய தீா்வு காணவில்லையென்றால் மதுக் கடைகளை முடக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.










