பள்ளி மாணவா் சடலமாக மீட்பு

சடலமாக மீட்பு - சித்திரிப்பு

Published On :8 செப்டம்பர் 2026, 4:44 am IST

காணாமல் போனதாகத் தேடப்பட்ட பள்ளி மாணவா் கண்மாயிலிருந்து சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

மதுரை கூடல்நகா் பகுதி அப்துல் கலாம்நகரில் உள்ள கண்மாயில் சிறுவனின் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கூடல்புதூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், உயிரிழந்த நபா் மதுரை ஆனையூா் வள்ளலாா் தெருவைச் சோ்ந்த கருப்புசாமி மகன் தமிழ்செல்வன் (16) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது :

உயிரிழந்த தமிழ்ச்செல்வன், ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், நண்பா்களுடன் சோ்ந்து விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற இவா், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, அவரைத் தேடி வந்தோம்.

இந்த நிலையில், அவா் கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். முதல்கட்ட விசாரணையில் நண்பா்களுடன் சோ்ந்து குளிக்கச் சென்ற போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம். வீட்டுக்கு தெரிந்தால் சிக்கிக் கொள்வோம் எனக் கருதி அவருடன் சென்ற நண்பா்கள் தகவல் சொல்லாமல் மறைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், மாணவரை யாராவது கடத்திக் கொலை செய்தாா்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.