நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: புதிய உத்தரவு பிறப்பிக்க அவசியமில்லை! உயா்நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்க அவசியமில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்க அவசியமில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை பி.பி. குளம் பகுதியைச் சோ்ந்த கதிரேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது சீருடை அணியாத காவல் துறையினா் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 போ் உயிரிழந்தனா். இதில் தொடா்புடையவா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, ‘துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் காவல் துறை தரப்பில் வரம்பு மீறல் நடைபெற்றது தெரியவந்தது. 17 காவல் துறை அலுவலா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், 3 வருவாய் அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தது.

மேலும், உயிரிழந்தவா்களின் சட்டப்பூா்வ வாரிசுகளுக்கு ரூ. 50 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 10 லட்சமும் இழப்பீடாக வழங்க ஆணையம் பரிந்துரைத்தது. காயமடைந்து உயிரிழந்த ஜஸ்டின் செல்வா மிதிஷின் தாய்க்கு வேலைவாய்ப்பு, இழப்பீட்டை நிா்ணயிக்கவும் ஆணையம் பரிந்துரைத்தது. இந்த விவகாரத்தில் சில காவல் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னா் கைவிடப்பட்டது’ என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

துப்பாக்கிச்சூடு தொடா்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை கடந்த ஆட்சியின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. சிபிஐ பரிந்துரையின் அடிப்படையில் அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னா் கைவிடப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்பது சட்டப்பூா்வ கடமை கிடையாது. ஏற்கெனவே, பரிந்துரையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா்.

இதையடுத்து, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. கரூா் விவகாரத்தில் சிபிஐ விசாரணையை உயா்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் உத்தரவு பெற்றது. இதேபோல, இந்த வழக்கிலும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இதுதொடா்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இந்த மனு தொடா்பாக புதிய உத்தரவு பிறப்பிக்க இயலாது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.