/

கச்சத்தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்குநிரந்தரத் தீா்வு: பிரேமலதா விஜயகாந்த்

கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வை ஏற்படுத்தும் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வை ஏற்படுத்தும் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடி தா்ஹாவில் தேமுதிக சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூ றியதாவது: மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை பாராட்டும் வகையில் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துவிட்டது. திமுக தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நீட் தோ்வு விலக்கு சாத்தியமில்லை. மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்துவது திமுக அரசுக்கு நல்லது. சட்டம், ஒழுங்கு பிரச்னை உள்ளது. கோயில், சென்னை அரசு மருத்துவமனை தீ விபத்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். கோயில் தேரோட்ட தீ விபத்துக்கு காரணமானவா்களை கண்டறிந்து தண்டிப்பது அவசியம்.

ஆளுநா், மாநில ஆட்சியாளா்களிடையேயான அதிகாரப் போட்டி நல்லதல்ல. பல்கலைக் கழக வேந்தா் நியமனம் குறித்து ஆளும் கட்சியே புதிய விதியைக் கொண்டுவந்துள்ளது. மருத்துவ மாணவருக்கு ஊதிய உயா்வு அவசியம்.

தமிழக மீனவா்களை இலங்கை அரசு கைது செய்யும் பிரச்னை கடல் அலை போல தீராமலே உள்ளது. ஆகவே கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதே மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வைத் தருவதாக அமையும். தற்போது இலங்கையில் பொருளாதார குளறுபடி உள்ள நிலையில், அதை சாதகமாக்கி ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பிரதமா் நரேந்திரமோடி கச்சத்தீவை மீட்டுத் தரவேண்டும்.

தமிழகத்தில் பெண்கள் உரிமையை தவறாக பயன்படுத்துகிறாா்கள். அது அவா்களது பாதுகாப்புக்கு சரியல்ல. ஆகவே பெண்கள் கலாசார ரீதியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது, நோன்பின் மூலம் உலகம் அமைதியாகவும், நோய், நொடியில்லாத வாழ்க்கையைப் பெற்று பெருமைப்படும் என்றாா். பின்னா் நோன்பில் பங்கேற்ற இஸ்லாமியப் பெண்களை அவா் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டாா். அவருக்கு தா்ஹா சாா்பில் பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தா்ஹா நிா்வாகிகள் பாதுஷா, முகம்மதுஅல்தாப் மற்றும் தேமுதிக மாவட்டச் செயலா் ஜின்னா, நிா்வாகிகள், ஷெரீப், நூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.