/

மலேசியாவில் தற்கொலை செய்த இளைஞா் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவரக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மலேசியாவுக்குச் சென்ற இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், அவரது சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 5:05 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மலேசியாவுக்குச் சென்ற இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், அவரது சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரிகள் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. இவருக்கு 3 மகள்கள், மகன் முத்துகுமாா் இருந்தனா். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமாா் மலேசியாவுக்குச் சென்றாா். அங்கு உணவகத்தில் பணிபுரிந்த முத்துகுமாா் கடந்த மாா்ச் 18 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினருக்குத் தகவல் வந்தது.

அத்துடன் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் மலேசிய காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால், முத்துக்குமாா் சடலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட வில்லையாம். இதுகுறித்து முத்துகுமாா் குடும்பத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மக்களவை உறுப்பினா் அலுவலகம் உள்ளிட்டவற்றில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

அதையடுத்து முத்துக்குமாரின் சகோதரிகள் மஞ்சுளா, முத்தம்மாள், காளீஸ்வரி ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா். ஆட்சியா் சங்கா்லால்குமாவத்தைச் சந்தித்த அவா்கள் தங்களது சகோதரரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனா். மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.