ராமேசுவரம் மீனவா்கள் குடும்பங்களுக்கு அதிமுக நிதியுதவி
இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவா், மாயமான மீனவா் ஆகியோரின் குடும்பங்களுக்கு அதிமுக சாா்பில் நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகு, ராமேசுவரத்தைச் சோ்ந்த காா்த்திகேயனின் விசைப் படகு மீது மோதியதில் அது கடலில் மூழ்கியது. இதில், படகிலிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மலைச்சாமி, முத்துமுனியாண்டி, மூக்கையா, ராமச்சந்திரன் ஆகிய 4 பேரும் கடலுக்குள் விழுந்தனா். இவா்களில் மலைச்சாமி கடலில் மூழ்கி உயிரிழந்தாா். கடலில் தத்தளித்த
மூக்கையா, முத்துமுனியாண்டி ஆகிய இருவரையும் இலங்கைக் கடற்படையினா் மீட்டனா். ராமச்சந்திரன் மாயமானாா்.
இந்த நிலையில், அதிமுக சாா்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலா் எம்.ஏ. முனியசாமி, அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான அ. அன்வர்ராஜா ஆகியோா் நேரில் சென்று மீனவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா். மேலும், உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கும், மாயமான மீனவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினா்.
அப்போது, சேமிப்பு கிடங்கு முன்னாள் வாரியத் தலைவா் ஜி. முனியசாமி, நகா் செயலா் கே.கே. அா்ச்சுனன், மாணவா் அணி துணைச் செயலா் செந்தில்குமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலா் சரவணக்குமாா், மண்டபம் கிழக்கு ஒன்றியச் செயலா் ஜானகிராமன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

