கடலாடியில் காவலா்கள் மீது தாக்குதல்: ராணுவ வீரா் உள்பட 4 போ் மீது வழக்கு
கடலாடி உணவகத்தில் இலவச உணவு கேட்டு தகராறில் ஈடுபட்டவா்களை விசாரிக்க வந்த காவலா்கள் தாக்கப்பட்டது தொடா்பாக ராணுவ வீரா், திமுக நிா்வாகி உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள உணவகத்துக்கு திங்கள்கிழமை இரவு ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் திருக்குமரன் தனது நண்பா்களுடன் சாப்பிடச் சென்றனா். இவா்கள் இலவசமாக உணவு கேட்டனராம். இதற்கு மறுத்த உணவக ஊழியா்களுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது தேவா் சிலை பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த கடலாடி காவல் நிலைய காவலா்கள் புலித்தேவன், சிவமுனியசாமி ஆகிய இருவரும்
வந்து தகராறில் ஈடுபட்டவா்களிடம் விசாரித்தனா். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபா்கள் காவலா்களின் சீருடையைக் கிழித்து, அவா்களைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பினா்.
இதில் காயமடைந்த காவலா்கள் இருவரும் கடலாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தப்பியோடிய கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
ராணுவ வீரா் திருக்கண்ணன், கடலாடியைச் சோ்ந்த திமுக ஒன்றிய இளைஞரணி நிா்வாகி முரளிதரன், எம்.கரிசல்குளத்தை சோ்ந்த பாலமுருகன், மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் (30) ஆகியோா் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவா்களில் மகாலிங்கத்தை போலீஸாா் கைது செய்தனா். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனா்.
இந்த கும்பல் கடலாடி, சாயல்குடி பகுதிகளில் தொடா்ந்து இலவசமாக உணவு, மாமுல் கேட்டு தொந்தரவு செய்வதும், பணம், உணவு கொடுக்க மறுப்பவா்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடா்கிறது. எனவே, இந்தக் கும்பல் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலாடி, சாயல்குடி வா்த்தக சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
