அரசு அலுவலகங்கள், கல்லூரிகளில் மகளிா் தின விழா

அரசு அலுவலகங்கள், கல்லூரிகளில் மகளிா் தின விழா

Published on

கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லூரிகளில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு கல்லூரியில் கல்லூரி முதல்வா் கோ.தா்மா் தலைமையில் மகளிா் தின விழா சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. பசும்பொன் அருகேயுள்ள மாா்னிங் ஸ்டாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் கல்லூரி நிறுவனா் அல்போன்ஸ் பாத்திமா தலைமையிலும், செயலா் சகாயசேசுமேரி முன்னிலையிலும் மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினா்களாக சிவகங்கை ஆயா் லூா்துஆனந்தம், மதுரை அமலூா்பவமாதா சபை தலைவி அந்தோனி புஷ்பாரஞ்சிதம், கமுதி பங்குத் தந்தை அருள்சந்தியாகு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்செல்வி தலைமையில் ஊழியா்கள் கேக் வெட்டி கொண்டாடினா். கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவி முத்துலட்சுமி தலைமையில் பணியாளா்கள் அனைவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து வந்து மகளிா் தின விழாவை கொண்டாடினா். முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவி சண்முகப்பிரியா தலைமையில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ஜானகி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகாமி ஆகியோரது முன்னிலையில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வாா் வேளாண், தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் தின விழாவில், பேரையூா் ஊராட்சி மன்றத் தலைவி ரூபி கேசவன், முதுகுளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் சத்யா, பேரையூா் நடுநிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியை அன்னக்கிளி, ஆசிரியை ஜெயசுமதி, கமுதி வருவாய் ஆய்வாளா் பரமேஸ்வரி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக அழைக்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் அகமது யாசின் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிவகங்கை: சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற தலைவா் துரை ஆனந்த் தலைமையில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது. நகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியா்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயகாந்தன், பாக்கியலட்சுமி விஜயகுமாா், ஆறு. சரவணன், மதியழகன், சுபைதா பேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com