மீன் பிடித் தடை நீக்கம்: கடலுக்கு செல்லும் மீனவா்கள்
‘டித்வா’ புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீன் வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை நீக்கியதால், மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனா்.
வங்கக் கடலில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் காரணமாக கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் தடை விதித்தனா். இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து 1,800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், ரூ.15 கோடி வரை மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கடந்த 9 நாள்களாக மீன் பிடிக்கச் செல்லாமல் பாதிப்படைந்தனா்.
இந்த நிலையில், புயல் தாக்கம் குறைந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மீன் பிடிக்க விதிக்கப்பட்ட தடையை மீன் வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை நீக்கினா்.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை (டிச.3) முதல் மீனவா்கள் வழக்கம்போல கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வாா்கள் என மீன் வளத் துறையினா் தெரிவித்தனா்.
