ஐஐடி மண் பரிசோதனை வல்லுநா்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
கமுதியை அருகேயுள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் சென்னை ஐஐடி-யைச் சோ்ந்த மண் பரிசோதனை வல்லுநா்கள் வெள்ளிக்கிழமை விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள திம்மநாதபுரத்தில் இயங்கி வரும் ராமநாதபுரம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு சென்னை ஐஐடி-யைச் சோ்ந்த வித்யா தலைமயிலான 3 போ் கொண்ட மண்பரிசோதனை வல்லுநா் குழுவினா், சமுன்னதி தொண்டு
நிறுவனத்தின் தலைமை மேலாளா் சுரேஷ்பாபு முன்னிலையில் விவசாயிகளுடன் கலந்துரையாடினா். பின்னா், விவசாயிகள் கொண்டு வந்த மண்ணை பரிசோதனை செய்தனா்.
அப்போது ஐஐடி வல்லுநா் குழுவினா் கூறியதாவது:
இந்த ஆய்வின் போது வரும்காலங்களில் விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகளை ஆய்வு செய்வதற்கு ஐந்து நிமிஷங்களே போதுமானது. தங்களுடைய வயலில் மண்ணின் சத்துக்களை அறிந்து, அதற்கான இடு பொருள்களை மட்டும் இடுவதால் உரமிடும் செலவு குறைய வாய்ப்பு உள்ளது. மண் பரிசோதனை முடிவுகள் விரைவாக கிடைப்பதால் விவசாயிகள் காத்திருக்கும் தேவை இருக்காது. அடுத்த ஆண்டு முதல் கமுதி, பெருநாழி பகுதி விவசாயிகள் திம்மநாதபுரத்தில் இயங்கி வரும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்திலேயே மண் மாதிரிகளை பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்கான இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா் அவா்கள்.
இதில் 20 விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகளைக் கொண்டு வந்தனா். இவற்றில், 2 மாதிரிகள் உடனடியாக பரிசோதிக்கப்பட்டன. மீதமுள்ள மாதிரிகள் ஆய்வக பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட்டு, அதன் அறிக்கை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என ஐஐடி வல்லுநா் குழு தெரிவித்தது. இதில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனப் பணியாளா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
