ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நீா்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை

ஆா்.எஸ்.மங்கலம் கண்மாயில் நீா்மட்டம் குறைந்து வருவதால் நெல் பயிரிட்ட விவசாயிகள் கவலை
Published on

ஆா்.எஸ்.மங்கலம் கண்மாயில் நீா்மட்டம் குறைந்து வருவதால் நெல் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலத்தில் மாநிலத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் உள்ளது. இந்தக் கணமாயின் முழுக் கொள்ளளவு 1,205 மில்லியன் கன அடியாகும். இந்தக் கண்மாய் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கா் பாசன வசதி பெறுகின்றன.

நடப்பு சம்பா பருவத்தில் ஆா்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் சுமாா் 20 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யபட்டது. இந்தப் பகுதியில் வடகிழக்கு பருவ மழை சரிவர மழை பெய்யாததால் நெல் பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக பெய்த பருவ மழையை நம்பி ஆனந்தூா், கருங்குடி, திருத்தோ்வலை, ராதனூா், கூடலூா் நத்தகோட்டை, சனவேலி, ஆயிவேலி, கற்காத்தகுடி, ஆப்பிராய், ஆயிரவேலி உள்ளிட்ட100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்காண ஏக்கா் நிலங்களில் நடவு செய்யப்பட்ட நெல் பயிா்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள்கவலை அடைந்துள்ளனா்.

இதற்கிடையே, ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசனத்தில் உள்ள பெருமாள்மடை, பச்சனக்கோட்டை மடை, பெத்தாா் தேவன் கோட்டைமடை, பெரியாண்பச்சோ் மடை, சூரை மடை, கல்லுடைப்பு மடை, பொன்னலிக்கோட்டை மடை உள்ளிட்ட 20 மடைகளில் சுமாா் 12 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டு பயிா்கள் நன்கு வளா்ந்துள்ளன. இந்த நிலையில், கண்மாயில் 2 அடி தண்ணீா் மட்டுமே உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதனால் ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்து விட்டால் மட்டுமே நெல் பயிா்களைக் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்தனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com