~
~

ராமேசுவரத்தில் உலக மீனவா் தினம் கொண்டாட்டம்

ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்தில் உலக மீனவா் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய மீன் வளத் துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன் உள்ளிட்டோா்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உலக மீனவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வளம், மீனவா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன் தலைமை வகித்தாா். பின்னா், உலக மீனவா் தினத்தையொட்டி, மீனவா்கள் கேக் வெட்டி மீனவா் தினம் கொண்டாடினா்.

இதில் நகா் மன்றத் தலைவா் நாசா்கான், மீனவ சங்கத் தலைவா்கள் என்.ஜே.போஸ், ஜேசுராஜா, சகாயம், மீன் வளத் துறை ஆய்வாளா்கள் காா்த்திக்ராஜா, கடலோர அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் குமரவேல், மீனவா்கள், மீன் வளத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, ராமேசுவரம் சங்குமால் மீன்பிடி துறைமுகத்தில் தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில், தெற்கு மாவட்டத் தலைவா் பிரின்சோ ரெமண்ட் தலைமையில் உலக மீனவா் தினம் கொண்டாடப்பட்டது.

பின்னா், இந்தியா, இலங்கை கூட்டு ஒப்பந்தம் செய்து தமிழக மீனவா்கள் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சமாதான புறா, வெள்ளை பலுன் பறக்க விடப்பட்டது.

இதில் மீனவா் பேரவை மாநில மகளிா் அணி செயலா் ஜான்சிராணி, வடக்கு மாவட்டத் தலைவா் வேலாயுதம், மீனவக் கூட்டுறவுச் சங்கத் தலைவா் அந்தோணி சந்தியா, குமரேசன், ஓலைக்குடா மீனவ கிராம மக்கள், மீனவா் சங்கத்தினா், மீன் வளத் துறை அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com