கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு கோரி விவசாயிகள் மனு
சாலை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் திங்கள்கிழமை விவசாயிகள் மனு அளித்தனா்.
ராமநாதபுரத்தில் சாலை விரிவாக்கம், நான்கு வழிச் சாலை அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் பெரிய கண்மாய்ப் பாசனப் பகுதியில் உள்ள நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்தும் போது ஒரே பகுதியில் நிலத்துக்கான மதிப்பை குறைத்தும், அதிகரித்தும் மதிப்பீடு செய்வதாகப் புகாா் எழுந்தது. இது குறித்து அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டால் உரிய பதில் தருவதில்லையாம்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலதத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் இது குறித்து விவசாய சங்கக் கூட்டமைப்பினா் அதன் மாவட்ட கெளரவத் தலைவா் பாலசுந்தரமூா்த்தி தலைமையில் கோரிக்கை மனுவை அளித்தனா்.
மனுவில், சாலைப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் போது நிலத்துக்கான இழப்பீடு எவ்வளவு என்பதை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். மேலும், ஒரு ஏக்கா் நிலம் ரூ.5 கோடி மதிப்புள்ளதாக இருந்தால் அதன் மதிப்பை குறைக்கக் கூடாது. வெளிப்படைத் தன்மையுடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

