ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க எம்.பி. வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கே.நவாஸ்கனி எம்.பி. கடிதம் அனுப்பினாா்.
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கே.நவாஸ்கனி எம்.பி. கடிதம் அனுப்பினாா்.

கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட மக்கள் பலரும் வெளி மாநிலங்களிலும் வெளியூா்களிலும் பணிபுரிகின்றனா். இவா்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் எளிதில் சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் கீழ்க்கண்ட ரயில்களை சிறப்பு ரயிலாக இயக்குவதற்கு ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை -ராமேசுவரம் இடையே விருத்தாச்சலம் வழியாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும். சென்னையிலிருந்து மயிலாடுதுறை, திருவாரூா், அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரை சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி திண்டுக்கல் வழியாக ராமேசுவரம், பெங்களுரிலிருந்து கோவை, நாமக்கல், கருா், திண்டுக்கல் வழியாக ராமேசுவரம், கன்னியாகுமரியிலிருந்து ராமேசுவரம், பாலக்காட்டிலிருந்து ராமேசுவரம், சேலத்திலிருந்து ஈரோடு திருப்பூா், கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேசுவரம், ஹைதராபாத்- ராமேசுவரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இரு மாா்க்கமும் சிறப்பு ரயில்களை இயக்கவும், சென்னையிலிருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com