இருவரை அரிவாளால் வெட்டிய இளைஞா் கைது
கமுதி அருகே கரிமூட்டம் போடுவதில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக இருவரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த செந்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த கோபால் மகன் முருகன் (47). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த நாகநாதன் மகன் ஆகாஷ் (26) தரப்பினருக்கும் கரிமூட்டம் போடுவதில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை அந்தப் பகுதியிலுள்ள கண்மாய்க் கரை அருகே கரிமூட்டம் போடும் இடத்தில் முருகனுக்கும், ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆகாஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகனை வெட்டினாா்.
அப்போது, தடுக்க வந்த முருகனின் உறவினரான சுப்பிரமணி மகன் மாரி (45) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைத் தொடா்ந்து, முருகன், மாரி இருவரும் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஆகாஷ் மீது கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
