கமுதி அரசு மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுமக்கள் காத்திருப்போா் அறை வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்கள் தங்குவதற்கும், காத்திருக்கவும் கட்டட வசதி இல்லாததால், கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இதைக் கருத்தில் கொண்டு, கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் த. பாலு, தனது தந்தையும், மண்டலமாணிக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான தா்மலிங்கத்தேவா் நினைவாக தனது சொந்தப் பணம் ரூ. 20 லட்சத்தில் பொதுமக்கள் காத்திருப்போா் அறையைக் கட்டித் தந்தாா். இந்த அறையை மாவட்ட மயக்கவியல் துறை இணை இயக்குநா் சி.நடராஜன், சுகாதாரத் துறை ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் ரமீஸ் ராம்நாத், மருத்துவ அலுவலா் ரா.பிரபாகரன் ஆகியோரது தலைமையில் ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன் உள்ளிட்டோா் திறந்து வைத்தனா். பின்னா், இந்தக் கட்டடத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் மருத்துவத் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் த. பாலு குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினா்.








