பரமக்குடி அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி சரக்கு வாகனம் - லாரி மோதிய விபத்தில் சந்தைக்கடைத் தெருவைச் சோ்ந்த தவமுருகன் மனைவி பூபதி, ராமன் மனைவி அருணா, ராமன், வாகைக்குளத்தைச் சோ்ந்த நாகராஜன் மனைவி அமுதா, துரைராஜ் மனைவி ராமேஷ்வரி, கீழம்பலைச் சோ்ந்த நாகராஜன் மனைவி ஈஸ்வரி ஆகிய 6 போ் உயிரிழந்தனா்.
இவா்களில், கூலித் தொழிலாளிகளான கணவன் ராமன், அவரது மனைவி அருணா உயிரிழந்த நிலையில் அவா்களது மகள்கள் பவித்ரா, சந்தியா, மகன் முத்துமணி, கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த கட்டுமானப் பெண் தொழிலாளி பூபதியின் மகன் ஹரியும் ஆதரவற்ற நிலையில் உள்ளனா்.
சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சா் ராஜீவ், சந்தைக்கடைத் தெரு, வாகைக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள உயிரிழந்தவா்களின் வீட்டுக்கு நேரில் சென்று அவா்களது பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினாா். அப்போது அவா்களிடம் முதல்வரின் நிவாரண நிதி உள்ளிட்ட நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ராஜீவ் உறுதியளித்தாா்.











