மானாமதுரையில் திருக்கார்த்திகை விழாவுக்கு மண் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் திருக்கார்த்திகை நாளில் வீடுகளில் ஏற்றப்படும் மண் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் திருக்கார்த்திகை நாளில் வீடுகளில் ஏற்றப்படும் மண் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மானாமதுரையில் சமையல் செய்யத் தேவையான சட்டி, பானைகள், தவிர்த்து சீசனுக்கு தகுந்தவாறு அம்மன் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்த பயன்படுத்தப்படும் தீச்சட்டி, அக்னிச்சட்டி, பொம்மைகள், குதிரை எடுப்பு விழாவுக்கான குதிரை பொம்மைகள், கோடை காலத்தில் கூஜாக்கள், உண்டியல்கள், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலைகள் மற்றும் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும் கலைப் பொருள்கள் என விதவிதமான பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மானாமதுரையில் தயாரிக்கப்படும் கர்நாடக இசைக் கருவியான கடம் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மானாமதுரையின் பெருமையை ஒலித்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்கள் தரமானதாக இருப்பதற்கு இப்பகுதி கண்மாய்களில் கிடைக்கும் மண்ணின் உறுதித்தன்மை முக்கிய காரணமாக உள்ளது. மானாமதுரையில் தயாரிக்கப்படும் கடங்களுக்கு மட்டுமே கர்நாடக இசைக் கலைஞர்கள் விரும்பும் இசை ஒலி கிடைக்கிறது என்பதால் இங்கு தயாரிக்கப்படும் கடங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு.
அடுத்த மாதம் டிச. 2 ஆம் தேதி திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படுவதையொட்டி பெண்கள் வீடுகளில் மண்ணால் செய்யப்பட்ட கார்த்திகை விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். மெழுகில் தயாரிக்கப்படும் விளக்குகள் சந்தையில் விற்பனைக்கு வந்தாலும் இந்த கார்த்திகை விளக்குகளில் தீபம் ஏற்றுவதைத் தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.
தற்போது மானாமதுரையில் குலாலர்தெரு அருகேயுள்ள வேதியரேந்தல், பெரியகோட்டை, மேலப்பசலை, கீழப்பசலை, உடைகுளம் ஆகிய கிராமங்களில் மண்ணால் செய்யப்படும் கார்த்திகை விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் ஏராளமான குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. கார்த்திகை விளக்கு, தேங்காய் விளக்கு, சரவிளக்கு, கூம்பு வடிவ விளக்கு என பலவகைகளில் விதவிதமாக விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கார்த்திகை விளக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன. பிற வகை வடிவ விளக்குகள் ரூ.100-இல் இருந்து ரூ. 500 வரை விற்கப்படுகின்றன. தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கண்மாய்களில் மண் எடுக்க தடை நீடிப்பதால் மண் தட்டுப்பாடு மற்றும் மூலப் பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விளக்குகள் விலைகளும் அதிகரித்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளியூரிலிருந்து வியாபாரிகள் அதிக அளவில் விளக்குகளை வாங்கிச் செல்வதால் அவற்றைத் தயாரிக்கும் பணியும், வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...