நீர் மேலா ண்மை குறித்து அறிந்து விவசாயிகள் அதற்கேற்றவாறு வேளாண்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள அதப்படக்கியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 167 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியது:
இன்னும் ஓரிரு வாரங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இந்நிலையில்,மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் உள்ள பேரிடர் மேலாண்மை குழு, வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பருவ மழையின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும்,அவற்றிற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஏற்கெனவே நடைபெற்ற கூட்டங்களில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை மூலம் தமிழகம் இயல்பான அளவு மழையை பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகவே,இந்த மழைநீரை முறையாகப் பயன்படுத்தி, வேளாண்மையில் முழு பயனையும் அடைய அரசு செயல்படுத்தி வரும் பண்ணை குட்டைகள் உள்ளிட்ட நீர் மேலாண்மை குறித்தும், அதனைத் திறம்பட கையாள்வது எவ்வாறு என்பது குறித்தும் விவசாயிகள் அறிந்து,அதற்கேற்றவாறு வேளாண்மை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக, அவர் அதப்படக்கி பெரியகண்மாய் சாகுபடி பரப்பு, பயிர் சாகுபடி ஒத்திசை, தேசிய உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரிசை நெல் விதைப்பு, பண்ணைக் குட்டை செயல் விளக்கம்,திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள்,ஆதிதிராவிடர் நல விடுதி பராமரிப்பு பணிகள்,அரசு உயர் நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வினை மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில்,சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் என்.சுந்தரமூர்த்தி,காளையார்கோவில் வட்டாட்சியர்கள் சந்தானலெட்சுமி,அன்புதுரை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.