காளையார்கோவில் அருகே உள்ள கண்டங்குறிச்சி வரத்துக் கால்வாயை தூர்வார இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், அக்கல்வாயை சீரமைத்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் அவர்கள் அளித்துள்ள மனு: காளையார்கோவில் வட்டம் ஆள்பட்டவிடுதி வருவாய் கிராமத்துக்குள்பட்ட கண்டங்குறிச்சியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.
அங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வேளாண் பணி மற்றும் குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு கண்டங்குறிச்சி கண்மாய் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில், அந்த கண்மாய்க்கு வரும் வரத்துக் கால்வாய் வழித்தடங்களில் மணல்மேடு மற்றும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் அடைப்பட்டுள்ளது. இதனை தூர்வாரும் பணி அண்மையில் நடைபெற்றது.
கால்வாய் வரும் வழியில் இருபுறமும் உள்ள விவசாய நிலங்கள் வைத்துள்ள சிலர் தூர்வாரும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.
எனவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









