ஒரு கிராமம் முழுமையாக வளர்ச்சி பெற வேண்டுமென்றால் அங்குள்ள மக்கள் எவ்வித பாகுபாடின்றி ஒன்று கூடி திட்டங்கள் வகுத்து செயல்பட்டால் முழுமையான வளர்ச்சியை பெற முடியும் என்று கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன் கூறினார்.
சிவகங்கை மாவட்டம்
கட்டாணிப்பட்டி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தலைமை வகித்து பேசினார். இதில், அமைச்சர் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 391 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக தற்போதைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத் துறை அரசு முதன்மை அலுவலர்களை கொண்டு மனுநீதி நாள் முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் நடைபெறுகிறது. இம்முகாமில், தமிழக அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களால் தனிமனிதன் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது. ஒரு கிராமம் முழுமையாக வளர்ச்சி பெற வேண்டுமென்றால் அங்குள்ள மக்கள் எவ்வித பாகுபாடின்றி ஒன்று கூடி திட்டங்கள் வகுத்து செயல்பட்டால் அங்கு முழுமையான வளர்ச்சியை பெற முடியும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் காஞ்சனா, வருவாய் கோட்டாட்சியர் என்.சுந்தரமூர்த்தி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் (பொ) சுப்பையா, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கருணாகரன், துணை இயக்குநர் யசோதாமணி (பொது சுகாதாரம்), கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திலீப்குமார், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, வட்டாட்சியர்கள் கந்தசாமி, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.