சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் கல்லூரணி அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றதையடுத்து, ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.
பல ஆண்டுகளாக இப்பள்ளி 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்று வருகிறது. மாணவர்கள் வெற்றிக்கு உழைக்கும் பள்ளியின் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பாராட்டு விழா நடத்தி அவர்களுக்கு தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது.
இந்தாண்டு, இப் பள்ளி 10 ஆம் வகுப்பு தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றதையடுத்து, ஆசிரியர்களுக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் அரசு வழக்குரைஞர் மோகன்குமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனாட்சி மோகன்குமார் ஆகியோர் பள்ளியைச் சேர்ந்த 7 ஆசிரியர்களுக்கு, கல்லூரணி ஊராட்சி என பெயர் பொறிக்கப்பட்ட அரை பவுன் தங்க மோதிரங்களை வழங்கிப் பாராட்டினர்.
மேலும், 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து இப் பரிசுகளை வழங்கி வரும் வழகுகரைஞர் மோகன்குமார் குடும்பத்தினரை, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பாராட்டினார்.
இவ் விழாவில், கிராம மக்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, தலைமையாசிரியர் உதயக்குமார் வரவேற்றார்.