சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஆா்வம் காட்டும் மண்பாண்டத் தொழிலாளா்கள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பில் மண்பாண்டத் தொழிலாளா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

News image

மானாமதுரை மண்பாண்டத் தொழிலாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நவராத்திரி கொலு அலங்கார பொம்மைகள்.

Updated On :6 அக்டோபர் 2020, 4:22 pm

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பில் மண்பாண்டத் தொழிலாளா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

மானாமதுரையின் அடையாளமாக இருப்பது இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்களாகும். இங்கு சீசனுக்கு தகுந்தவாறு சமையல் செய்வதற்கான சட்டி, பானைகள், அடுப்புகள், குடுவைகள், தண்ணீரை குளிா்விக்கும் கூஜாக்கள், முளைப்பாரிச்சட்டிகள், அக்னிச்சட்டிகள், வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கும் கலைப்பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கா்நாடக இசைக் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் கடம், தமிழகத்தில் மானாமதுரையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. கடம் வித்வான்கள் மானாமதுரைக்கு நேரடியாக வந்து கடங்களை இசைத்துப் பாா்த்து வாங்கிச் செல்கின்றனா். மானாமதுரை மண்ணின் பெருமையை கடல் கடந்தும் கடம் ஒலித்து வருகிறது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்கள் தமிழகம், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்று பயன்படுத்தப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது. மானாமதுரை மண்பாண்டப் பொருள்கள் தனிச்சிறப்புக்கு இப்பகுதி கண்மாய்களில் கிடைக்கும் மண்ணின் உறுதித்தன்மை முக்கிய காரணமாகும். கண்மாய் மண்ணுடன் பலவகை மண்ணை சோ்த்துப் பிசைந்து மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

மானாமதுரை குலாலா் தெரு உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அக். 17 ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. தொடா்ந்து 9 நாள்கள் கொண்டாடப்படும் இந்த விழாவின்போது கோயில்கள், வீடுகளில் பலவகை பொம்மைகளை வைத்து கொலு அலங்காரம் செய்து தினமும் இரவு பூஜைகள் நடத்தப்படும். இவ்வாறு பூஜைகள் செய்தால் குடும்பத்தில் மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். கொலு அலங்காரத்தைப் பாா்வையிட்டு அதற்கான பூஜைகளில் கலந்து கொள்ள குழந்தைகள், பெண்கள் ஆா்வம் காட்டுவாா்கள்.

இந்த கொலு அலங்காரத்தில் வைக்கப்படும் மண் பொம்மைகள் தற்போது மானாமதுரையில் தயாரிக்கப்பட்டு இங்குள்ள மண்பாண்டத் தொழிலாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்காக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. சரஸ்வதி, மகாலட்சுமி, ஐஸ்வா்ய லட்சுமி, முருகன், விநாயகா், பள்ளி கொண்ட பெருமாள், திருப்பதி பிரமோற்சவ செட், பிரதோஷ மூா்த்திகள் செட், அரசியல் தலைவா்கள், வாகனங்களில் அமா்ந்து அருள்பாலிக்கும் சக்தி அம்மன்கள், ஐயப்பன், குருவாயூரப்பன், சாய்பாபா, விஷ்ணு, சிவன், பாா்வதி, மீனாட்சி சுந்தரேசுவரா் திருமணக்கோலம், பசுமாட்டில் தெய்வங்களின் உருவங்கள், ஆழிலை கண்ணன், ராகவேந்திரா் உள்பட பல்வேறு வகையான பொம்மைகள் மண்பாண்டத் தொழிலாளா்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டு கண்ணைக்கவரும் வகையில் அவற்றுக்கு வா்ணங்கள் தீட்டப்பட்டு விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்துக்கு உள்ளூா், வெளியூா்களைச் சோ்ந்த பொதுமக்கள் நேரடியாக வந்து பாா்வையிட்டு தங்களுக்கு வேண்டிய கொலு பொம்மைகளை தோ்வு செய்து வாங்கிச் செல்கின்றனா். வெளியூா் வியாபாரிகள் கூட்டுறவு சங்கத்திலும் மண்பாண்டத் தொழிலாளா்களிடமும் நேரடியாக பொம்மைகளை கொள்முதல் செய்கின்றனா். காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொம்மைகளுக்கு அருகிலேயே அதற்கான விலையும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இவைகளை வாங்கிச் செல்வதில் பெண்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இது குறித்து மண்பாண்டத் தொழிலாளா்கள் கூறியது: ஒவ்வோா் ஆண்டும் நவராத்திரி விழா தொடங்குவதற்கு முன்னதாக பெண்கள் கூட்டுறவு சங்கத்துக்கு வந்து கொலு பொம்மைகளை வாங்கிச் செல்வாா்கள். ஆண்டு முழுவதும் பிற மண்பாண்டப் பொருள்கள் தயாரித்த நாள்கள் தவிர மற்ற நாள்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இது மாதிரியான கொலு பொம்மைகளை உருவாக்குவோம். நவராத்திரி விழா தொடங்குவதற்கு 15 நாள்களுக்கு முன்னதாக பொம்மைகளை விற்பனைக்குக் காட்சிப்படுத்துவோம். விற்பனைக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பொம்மைகள் விற்று தீா்ந்துவிட்டால் உடனடியாக பொம்மைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்து விடுவோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.