சிவகங்கை மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, ஆரம்ப கால வேளாண் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உரங்களும் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் உரங்களை மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாா் உரக் கடைகளில் வாங்கி பயன்பெறலாம். விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் அனைத்தும் வேளாண் துறையால் வழங்கப்படும் மண்வள அட்டை பரிந்துரைப்படி உரம் வழங்கவும், விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் உரங்களின் விலைப்பட்டியல் மற்றும் இருப்பு உள்ள அளவு தெளிவாக விலைப் பட்டியல் பலகையில் அனைவருக்கும் தெரியும்படி குறிப்பிடப்பட வேண்டும்.
உரங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விலைக்கு விற்கப்பட வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.