மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
மானாமதுரை நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையர் கண்ணன், தலைமை எழுத்தர் கணேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் தமிழக அரசு உத்தரவின்படி, மானாமதுரை நகராட்சி பகுதியில் சொத்து வரியை உயர்த்துவது சம்பந்தமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு இத் தீர்மான நகலை தலைமை எழுத்தர் கணேசன் வாசித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அதிமுக 15-ஆவது வார்டு உறுப்பினர் தெய்வேந்திரன், ஏற்கனவே கரோனா பொதுமுடக்க பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராத நிலையில், தற்போது சொத்து வரி உயர்வு என்பது பொதுமக்களை மிகவும் பாதிக்கும். இதனால், வீட்டு வாடகை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் உயரும் நிலை ஏற்படும். எனவே, சொத்து வரி உயர்வுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது எனக் கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்து கூட்டம் நடந்த அறையை விட்டு வெளியேறினார்.
தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அதிமுக உறுப்பினர்களும் கூட்டத்திலிருந்து வெளியேறினர். அதன்பின்னர், திமுக மற்றும் அதன் ஆதரவு உறுப்பினர்களின் ஒப்புதலோடு சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.