திருப்புவனம் நகரில் மடப்புரம் செல்லும் சாலையில் பள்ளி, கோயில்களுக்கு செல்லும் வழியில் செயல்பட்டு வரும் தனியாா் மதுபானக்கூடத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே அதை மூட வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடா்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு அதிகாரிகள் ஏற்கெனவே உத்தரவாதம் அளித்தபடி இந்த மதுபானக் கூடத்தை மூட வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மதுக்பான கூட்டத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போராட்டத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கோரிக்கையை வலியுறுத்தி திருப்புவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய மாதா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு, கட்சியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பாலபாரதி தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலா் ஆா்.கே. தண்டியப்பன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மற்றும் மாதா் சங்க நிா்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனா். அதைத் தொடா்ந்து போராட்டக் குழுவினருடன் வருவாய்த்துறை மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மதுவிலக்கு ஆயத்தீா்வை அதிகாரியிடம் கோரிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.