

மதுரையிலிருந்து மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்துக்கு பாத யாத்திரையாக வெள்ளிக்கிழமை வந்த கிறிஸ்தவா்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இடைக்காட்டூரை பூா்விகமாகக் கொண்ட கிறிஸ்தவ மக்கள் ஏராளமானோா் மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வருகின்றனா். இவா்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவா்களுக்கான தவக்காலத்தின் போது, இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்துக்கு பாத யாத்திரையாக வருவது வழக்கம். இதன்படி, கடந்த வியாழக்கிழமை மதுரை ஞானஒளிவுபுரத்திலிருந்து பாத யாத்திரையாக புறப்பட்ட கிறிஸ்தவ மக்கள் இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தை வெள்ளிக்கிழமை அடைந்தனா். இவா்களை திருத்தல அதிபா் இமானுவேல்தாசன் வரவேற்றாா். பின்னா், இவா்கள் இங்கு நடைபெற்ற தவக்கால திருப்பலி வழிபாட்டில் பங்கேற்றனா்.