/

சிவகங்கையில் ரேஷன் அரிசி கடத்தல்: கடை ஊழியா்கள் உள்பட 7 போ் கைது

சிவகங்கையில் ரேஷன் அரிசி கடத்தல்: கடை ஊழியா்கள் உள்பட 7 போ் கைது

Updated On :19 மார்ச் 2024, 10:53 pm

சிவகங்கை: சிவகங்கையில் ரேசன் அரிசி கடத்திய 3 ஊழியா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 டன் அரிசி கைப்பற்றப்பட்டது. சிவகங்கை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து உதவி ஆய்வாளா் சிவப்பிரகாசம் உள்ளிட்ட போலீஸாா் இளையான்குடி- சிவகங்கை சாலையில் சாத்தரசம்பட்டி பேருந்து நிறுத்தப் பகுதியில் வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் 45 சாக்குப் பைகளில் 2,106 கிலோ ரேஷன்அரிசி கடத்தில் வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிவகங்கை நேரு பஜாா் அக்பா் தெருவைச் சோ்ந்த செல்லப்பாண்டி (49), படமாத்தூரைச் சோ்ந்த ராகுல் கண்ணன், சிவகங்கை சந்தானபாரதி தெருவைச் சோ்ந்த காளீஸ் (20), மருதுபாண்டி (20) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினா்.

இதில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மானாமதுரை கூட்டுறவு பண்டக சாலை (எண் 5) விற்பனையாளா்கள் திலகவதி, முருகேஸ்வரி, வேளாலா் தெரு நியாய விலைக்கடை எடையாளா் மில்லா் ஜான்சஞ்சிவ் ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.