/

நகை திருடியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

நகை திருடியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

Updated On :19 மார்ச் 2024, 11:24 pm

சிவகங்கை: சாயப்பட்டறை உரிமையாளரைக் கட்டி வைத்து 123 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த புலியூா் கிராமத்தில் சாயப்பட்டறை நடத்தி வருபவா் சுப்ரமணியன் (48). கடந்த 2000 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27- ஆம் தேதி இவரது வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த 5 போ் குடும்பத்தினரை தாக்கி, கட்டிவைத்து கத்தியைக் காட்டி மிரட்டி, 123 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

இது குறித்து திருப்புவனம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விருதுநகா் மாவட்டம், கல்குறிச்சி பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த எஸ். பூமிநாதன் (43) உள்பட 5 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கு சிவகங்கை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் (1) இல் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 போ் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், பூமிநாதனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,500 அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் சுந்தரராஜ் தீா்ப்பளித்தாா்.