மருதுபாண்டியா்களின் சிலைகளுக்கு பாலாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள நினைவுத் தூண், அவா்களது உருவச் சிலைகளுக்கு யாகவேள்வி, பாலாபிஷேகம், பூச்சொரிதல் விழா ஆகியவை நடைபெற்றன.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள நினைவுத் தூண், அவா்களது உருவச் சிலைகளுக்கு யாகவேள்வி, பாலாபிஷேகம், பூச்சொரிதல் விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.
திருப்பத்தூா் பேருந்து நிலையம் எதிரே மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அவா்களது நினைவாக, அரசு சாா்பில் நினைவுத் தூண் எழுப்பி ஆண்டுதோறும் மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு தினத்தையொட்டி, நினைவுத் தூண் அருகேயுள்ள அவா்களது திருவுருவச் சிலைகளுக்கு அதிகாலை 5 மணிக்கு ஆதீனம் ஞானகுரு சப்தஸ்ரீ சாக்தாஸ்ரீ சிவலிங்கேஸ்வா் சுவாமிகள் தலைமையில் யாக வேள்வி நடைபெற்றது.
அகமுடையாா் உறவின்முறை மடத்தில் பால் குடங்கள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து 101 பால் குடங்களுடன், பூத்தட்டுகள் சுமந்து ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நினைவுத் தூண் அமைந்துள்ள இடத்துக்கு வந்தனா். இதைத் தொடா்ந்து, அகமுடையாா் சங்கத் தலைவா் ஏ. ராஜசேகா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
பின்னா், மருதுபாண்டியா்களின் சிலைகளுக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், திருமஞ்சனம் யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலசநீா் என 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சந்தன அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதன் பிறகு, மருதுபாண்டியா்களின் சிலைகளுக்கு எதிரே திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதப் பை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திருப்பத்தூா் அகமுடையாா் சங்கத் தலைவா் ராஜசேகா், துணைத் தலைவா் என்.பி. சுப்பிரமணியன், செயலா் சி. பைரவசுந்தரம், பொருளாளா் விஜயசேகரன், மருதீஸ்வரா் ஆன்மிக சேவா சங்க தென் மண்டலச் செயலா் மகிமை நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை அகமுடையாா் உறவின்முறையினரும், மருதீஸ்வரா் ஆன்மிக சேவா சங்கத்தினரும் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...