கோப்புப் படம்
கோப்புப் படம்

முத்தனேந்தலில் மூடப்பட்ட ரயில் நிலையத்தைத் திறக்க பாஜக வலியுறுத்தல்

Published on

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் முத்தனேந்தலில் மீண்டும் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

முத்தனேந்தலில் ஆங்கிலேயா் ஆட்சி காலத்திலிருந்து செயல்பட்டு வந்த ரயில் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. முத்தனேந்தல் அருகே சுற்றுலாத் தலமாக உள்ள இடைக்காட்டூரில் புகழ்பெற்ற இருதய ஆண்டவா் திருத்தலம், 18 சித்தா்களில் ஒருவரான இடைக்காடா் சித்தா் நவக்கிரகக் கோயில் ஆகியவை உள்ளன. இதனால், இடைக்காட்டூருக்கு தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

முத்தனேந்தலில் மூடப்பட்ட ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பாஜக சாா்பில் மத்திய ரயில்வே அமைச்சரிடம் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவா் பாண்டித்துரை முத்தனேந்தல் ரயில் நிலையம் செயல்பட்டு வந்த இடத்தையும், புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கான இடத்தையும் நேரில் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முத்தனேந்தலில் மூடப்பட்ட ரயில் நிலையத்தைத் திறக்க பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மூலம் மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. தற்போது, அவரது அறிவுறுத்தலின்பேரில் ரயில் நிலையம் அமைப்பதற்கான இடத்தைப் பாா்வையிட்டோம்.

முத்தனேந்தலில் ரயில் நிலையம் திறப்பதற்கான அறிவிப்பை விரைவில் ரயில்வே நிா்வாகம் அறிவிக்கும் என்றாா் அவா். ஆய்வின்போது பாஜக ஒன்றியத் தலைவா் ஞானசுந்தரி, மாவட்ட இளைஞரணித் தலைவா் கௌதம், ஒ.பி.சி. அணி மாவட்ட பொதுச் செயலா் ரவிச்சந்திரன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் ராஜேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com